பித்அத்கள்

இஸ்லாமியப் பார்வையில் புத்தாண்டு

بسم الله الرحمن الرحيم

இஸ்லாமியப் பார்வையில் புத்தாண்டு

இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கமாகும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்கு சொந்தக்காரன் மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் அவன்தான் கடவுளாவான். எனவே அவன் படைத்த நாட்களை பற்றி அவன் கூறுவதை பாருங்கள் .

(9:36) …إنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالأَرْض
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பனிரெண்டு ஆகும்… அல் குர்ஆன் : 9:36

எனவே இறைவன் கொடுத்த பனிரெண்டு மாதங்களில் நல்லது கெட்டது என்று பார்ப்பது கூடாது. அப்படி பார்த்தால் அவன் படைத்த நாட்களில் குறையுண்டு என ஆகி, அவனை பலவீனமானவனாக ஆக்க நேரிடும். எனவே அவன் என்றைக்குமே பலவீனமில்லாதவன் பலமுள்ளவன்.

பகுத்தறிவை இழக்கிறோம்.
முஸ்லிம்களில் சிலர் முஸ்லிம் அல்லாதவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்கள், நேரங்கள் இவைகளில் நல்லநாள், கெட்டநாள், நல்லநேரம், கெட்டநேரம் என பார்த்து தங்களது வேலைகளை தொடங்குகிறார்கள். குறிப்பாக திருமணம் நடத்துவது, கடைகள் திறப்பது போன்ற நல்ல காரியங்களுக்காக இதை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இப்படி செய்வதன் மூலம் அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட விலைமதிக்க முடியாத பகுத்தறிவை இழந்துவிடுகிறோம். அதிலும் குறிப்பாக புது வருடம் பிறக்கின்ற பொழுது அன்றைய தினம் புத்தாடைகள் அணிந்து சந்தோஷமாக இருந்துவிட்டால் வருடம் முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் எனக்கருதி புத்தாடைகள் வாங்கி நல்ல பல உணவுகள் தயார் செய்து உண்டு மகிழ்கிறார்கள். இப்படி செய்த அனைவருமே வருடம் முழுவதும் சந்தோஷமாக இருந்திருக்கிறார்களா? என ஒரு நிமிடம் சிந்தித்துப்பார்த்தால் இல்லை என பதில் வரும் அப்பொழுது புரிந்து கொள்ளலாம் பகுத்தறிவை இழந்துவிட்டோம்.

இன்னொரு கோணத்தில் சிந்தித்து பாருங்கள் அதாவது புத்தாண்டு தினத்தில் நல்லது நடந்தால் வருடம் முழுவதும் நல்லது நடக்கும், ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டால் பிள்ளை பெறுவது நல்ல செயல் எனவே புத்தாண்டு தினத்தில் இப்படி சந்தோஷம் நடந்திருக்கிறது எனவே இந்த சந்தோஷம் வருடம் முழுவதும் உண்டாகட்டும் என எந்த பகுத்தறிவாவது விரும்புமா, அது சாத்தியமா? குழந்தை பெற்றவள் வருடப் பிறப்பன்று பெற்றெடுத்திருக்கிறாள் எனவே தினந்தோறும் பிள்ளை பெற்றுக்கொண்டே இருப்பாள் என பகுத்தறிவு கூறுமா? அல்லது ஏற்குமா? இது எவ்வாறு சாத்தியம் இல்லையோ அவ்வாறே நல்லது கெட்டது அனைத்தும் அவன் புறத்திலிருந்தே நடக்கிறது என நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அவ்வாறே அன்றைக்கு கெட்டது நடந்தால் அது நடந்து கொண்டே இருக்குமாம் அப்படியெனில் அன்றைக்கு ஒருவர் இறந்து விடுகின்றார் அத்துடன் அவருடைய வாழ்க்கை முடிந்துவிடுகிறது, இல்லை புத்தாண்டு தினத்தில் கெட்டது நடந்து விட்டது எனவே கெட்டது நடக்கும் என்றால் அவர் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டே இருப்பாரா? அல்லது அவர்களுடைய வீடுகளில் தினந்தோறும் இறந்து கொண்டே இருப்பார்களா?சிந்தித்துப் பாருங்கள் நாம் எவ்வாறு நமக்கு கொடுக்கப்பட்ட பகுத்தறிவை இழக்கின்றோம் நாட்களின் மீது நம்பிக்கை வைக்கின்றோம் ஈமானை இழந்துவிடுகிறோம். அல்லாஹ் நம் அனைவரையும் இதுபோன்ற செயல்களிலிருந்த பாதுகாப்பானாக!

எனவே புத்தாண்டு கொண்டாடுவதோ, அதற்கு வாழ்த்துக்கள் கூறுவதோ, அதற்காக வைக்கப்படும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோ எதுவுமே இஸ்லாத்தில் அனுமதியில்லை. அவ்வாறே பிறந்தின விழா (Birthday), திருமணநாள் (Weddingday) போன்று எதையும் கொண்டாடுவதற்கு அனுமதியில்லை. இவைகள் அனைத்தும் மாற்று மதத்தினருடைய கலாச்சாரம் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும். எனவே மாற்று மதக்காலச்சாரத்தை நாம் செய்யக்கூடாது காரணம் :

யார் மாற்று மத கலாச்சாரத்திற்கு ஒப்பாகிறாரோ அவர் நம்மைச்சார்ந்தவரல்ல என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரலி) நூல் : அபூதாவூது (3515)